articles

img

. குழந்தை தொழிலாளர்களுக்கு சட்டம் இருக்கு

      பரப்பான நகரின் மத்திய பகுதியில்  ஒரு சினிமா தியேட்டர் வாசலில் சென்று கொண்டிருந்தேன். டிக்கெட் எடுக்கும் வரிசையில் கூட்டம் அளவாகவே இருந்தது. படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களே ஆன நிலையில், “சுமாரான படம்” என்று யூட்யூப்பில் சிலர் விமர்சனங்களில் வறுத்தெடுக்க, “குழந்தைகளுக்கான படம், குடும்பங்களுக்கான படம்” என்று சிலரின் கருத்தின் பேரில் பொழுதுபோக்கிற்காக படம் பார்க்க வந்தேன். மற்றபடி படத்தில் நடித்த நடிகரின் ரசிகனாக இல்லை.

   அதிலும் எனக்கோ ரொம்ப்ப்ப்ப அரிதா படம் பார்க்கும் பழக்கம் உண்டு...!  

   வண்டி நிறுத்துமிடத்தில், பைக்கை நிறுத்தி கொண்டிருந்தபடி, டிக்கெட் கவுண்டரின் முகப்பில் நின்ற நபரை ஏறெடுத்து பார்த்தேன். அவரோட மீசையும், நெத்தி மேல ஒரு வரிசையில் மட்டும் 5,6 மிமி முடி வச்சு, அதில் பாதிக்கு ப்ரவுன் கலர் அடித்திருந்த ரசனையின் பின்னணி என்னவா இருக்கும்ன்னு சந்தேகமாவே யோசித்து கொண்டிருந்தேன்.  

   ‘சார் இந்தாங்க’, என் பின்னாடி இருந்து ஒரு சிறுவன் டோக்கனை நீட்டினான்...  

   சட்டென்று சிறுவனை பார்த்ததும் கோபம் பொங்கி வந்தது. “எங்க ஒங்க ஓனர்?” என்றேன்.

     “அவரு தான்” என்று  டிக்கெட் கவுண்டர் முகப்பில் நின்றவரை காட்டினான்.  கோபத்தில் அந்த சிறுவனையும் அழைத்து கொண்டு அவரிடம் போய், “இந்த சின்ன பயலுக்கு என்ன வயசிருக்கும்.

    அவன பள்ளி கொடத்துக்கு அனுப்பாம, இப்புடி வேலைக்கு வச்சிருக்கியே!” என்று ஆவேசமாக கத்தியபடி நிற்க, வரிசையில் நின்ற ஒன்றிரண்டு பேர் ‘ஏதோ பிரச்சினை’ என்று செல்போனில் வீடியோ எடுத்தபடி, என்  அருகில் வந்தார்கள்.  ஓனரோ எந்த பதட்டமும் இல்லாமல் அந்த சிறுவனை பார்த்து, “டோக்கன் குடுத்தியா?” எனக் கேட்டார். அந்த சிறுவனோ, பதட்டத்தில் “ம்ம்....” என்றபடி தலையாட்டினான்.  கேமரா எடுப்பவர்களின் பக்கமாக திரும்பி, “பேஸ்புக் லைவ் போட்டுருக்கியா ?” என்றேன்.  “ஆமாண்ணா” என்றார்.  

    “பார்த்தீங்களா?, இந்த மாதிரி கஷ்டப்படுற குழந்தைகளுக்கு கம்மி சம்பளத்துல, எடுபுடி வேல குடுத்துட்டு இருக்குற இந்த மாதிரி முதலாளிகளை எல்லாம் வன்மையா கண்டிக்கனும். இந்த தியேட்டருக்கே அரசாங்கம் சீல் வைக்கனும்” என்று ஆவேசத்தை கொட்டி தீர்த்து, தியேட்டர் ஓனரையும், அந்த சிறுவனையும்  திரும்பிப் பார்த்தேன்.  என்னை சுற்றி படம் பார்க்க வந்தவர்களில் பலரும் கூடி நிற்க, ஆதரவு பெரிதாக உள்ளதாக மலைத்தபடியும், அநியாயத்தை தட்டி கேட்ட திருப்தியும் அப்போது இருந்தது.  

    அந்த சிறுவனிடம், “உங்க அப்பா அம்மா எங்க ?” என்று கூட்டத்திலிருந்து ஒருவர் கேட்டார்.  “இவரு தான் எங்கப்பா” என்று தியேட்டர் ஓனரை காட்ட, சற்று நொடிகளில் எனக்கு ஷாக் அடித்தது போன்று இருந்தது. பேஸ்புக் லைவ் போட்டு கொண்டிருந்தவர் கேமராவோடு  திருதிருவென்று முழிக்க, நானும் பேச முடியாமல் திகைத்து நின்றேன்.  

    “உங்க பையனா?” என ஆச்சரியத்தில் ஓனரிடம் கேட்டார் ஒருவர்.  “அட ஆமாங்க, ஸ்கூல் லீவுல இங்க வருவான். டோக்கன் குடுக்க, இல்ல புரொஜக்டர் ரூம்ல எதாவது எனக்கு ஒத்தாசை பண்ணுவான்” என்று சிரித்தபடி ஓனர் சொல்ல, “அட போங்கய்யா! என்னான்னே தெரிஞ்சுக்காம, ஆனா ஊனா கேமராவ ஆன் பண்ணிட்டு வந்து வெட்டி ஞாயம் பேசுறாங்க” என்று கூட்டத்தில் என்னை திட்டினார்கள்.  

    “அட நீ சொன்னது நல்ல விஷயம் தான். குழந்தங்கள வேலைக்கு வக்கக் கூடாதுன்னு எனக்கும் தெரியும். என் புள்ளைய முழு நேரம் சுரங்கத்துலயோ, கம்பெனிலயோ, இல்ல என் தியேட்டர்ல போட்டு வேலை வாங்கல. பள்ளிக் கொடம் போயிட்டு வந்து குழந்தைகள் விருப்பப்பட்டா பெத்தவங்களுக்கு ஒத்தாசையா கொஞ்ச நேரம் வேல பார்த்து குடுக்கலாம்னு சட்டமே இருக்கு. நீ பாக்க வந்த படத்துல கூட  குழந்தைகள் நடிச்சிருக்கு. குழந்தை தொழிலாளர்களுக்கு சட்டம் இருக்கு.

    ஆனா குழந்தை நட்சத்திரத்துக்கு இருக்கா ?...” என்று சிரித்தபடியே என்னிடம் ஓனர் கேட்க, அந்த சிறுவனும், சுற்றி நின்றவர்களும் கிண்டலாக சிரித்தபடி கலைந்து சென்றார்கள். “சரி... போய் படம் பாருங்க” என்று சொல்லிவிட்டு ஓனர் செல்ல, “அட்வைஸ் பண்ணி மாஸ் காட்ட நினைச்சாரு. ஆனா மொக்க வாங்கிட்டாரு நம்ம பூமர் அங்கிள்ன்னு,

     பேஸ்புக் லைவில் குரல் கொடுத்து வீடியோவை மாற்றி பதிவேற்றியபடி அவனும் கிண்டலடித்தபடி நகர்ந்தான்.  “அநாவசியாம பேசி அசிங்கப்பட்டனே! என்று நினைத்தபடி தலை கவிழ்ந்த எனக்கு, வறுமைக்காகவும், பணத்திற்காகவும் வேலைக்கு வரும் குழந்தைகளை காக்க சட்டம் இருக்கு. அதே காசுகாகவும், பப்ளிசிட்டிகாகவும் நடிக்கும் இந்த குழந்தை நட்சத்திரத்திற்கு என்ன சட்டமா இருக்கு? அப்போ காசுக்காக சினிமாவில் தொழிலாக குழந்தைகள் நடிச்சா தப்பில்லையா?” என்று சிந்தித்தபடியே படம் பார்க்காமே தியேட்டரை விட்டு வெளியே வந்தேன்.